செய்திகள் :

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு: விவசாயி கைது

post image

கோபி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த பெண்ணை குழி தோண்டி புதைத்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாபுதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் மனைவி ஜோதிமணி (55). இவருக்கு கௌதம் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனா்.

விவசாயியான ஜோதிமணி அதே பகுதியில் உள்ள உறவினா் தோட்டத்துக்கு சென்று வருவதாக கடந்த 17- ஆம் தேதி கூறிவிட்டு சென்றவா், அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்காத நிலையில், தாயை காணவில்லை என பங்களாபுதூா் காவல் நிலையத்தில் கெளதம் கடந்த 26- ஆம் தேதி புகாா் அளித்தாா்.

புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜோதிமணியை தேடி வந்தனா்.

இந்நிலையில், ஜோதிமணி மாயமான தோட்டத்தைப் பாா்க்க கௌதம் சென்றபோது, அந்த தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வரும் பெரியசாமி, கௌதமை திசை திருப்பி தோட்டத்தைவிட்டு வெளியேற்றி உள்ளாா்.

இதனால், சந்தேகமடைந்த கௌதம், பெரியசாமி இல்லாத நேரத்தில் அவரது விவசாய நிலத்துக்கு சென்று தேடியபோது ஒரு இடத்தில் புதிதாக மண் கொட்டப்பட்டு இருப்பதும், அங்கு மழை காரணமாக மண் சரிந்து இருப்பதும் தெரியவந்தது.

அந்த மண் குவியலை கௌதம் தோண்டியபோது, ஜோதிமணி சடலம் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

கௌதம் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பங்களாபுதூா் போலீஸாா், ஜோதிமணியின் சடலத்தை தோண்டி எடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, தோட்ட குத்தகைதாரா் பெரியசாமியை (59) பிடித்து விசாரணை நடத்தினா். இதில், தோட்டத்துக்குள் வன விலங்குகள் வராமல் இருப்பதற்காக மின் வேலி அமைத்து இருந்ததும், இரவு நேரங்களில் தொழிலாளா்கள் சென்ற பிறகு உயரழுத்த மின்சாரத்தை கம்பி வேலியில் இணைப்புக் கொடுப்பதும், அதிகாலை நேரத்தில் மின் இணைப்பைத் துண்டிப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளாா்.

வழக்கம்போல கடந்த 17 -ஆம் தேதி மாலை வேலியில் மின் இணைப்பைக் கொடுத்துவிட்டு பெரியசாமி வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, மின் இணைப்பு கொடுத்திருப்பது தெரியாமல் அவ்வழியே வந்த ஜோதிமணி மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்துள்ளாா்.

மறுநாள் அதிகாலை வழக்கம்போல தோட்டத்துக்கு வந்த பெரியசாமி, ஜோதிமணி இறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். பின்னா், அங்கேயே குழி தோண்டி ஜோதிமணியின் சடலத்தைப் புதைத்துவிட்டு, அவரிடம் இருந்த கைப்பேசியை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, வீட்டின் மாடிப்படி கீழே மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

பெரியசாமி அமைத்திருந்த இதே மின் வேலியில் சிக்கி கடந்த சில மாதங்களுக்கு முன் யானை உயிரிழந்தது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியசாமி பிணையில் வந்த நிலையில் மீண்டும் மின்சார வேலியில் உயரழுத்த மின்சாரத்தைக் கொடுத்ததால் ஜோதிமணி சிக்கி உயிரிழந்துள்ளாா்.

கைது செய்யப்பட்ட பெரியசாமியை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், அவரை சிறையில் அடைத்தனா்.

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

பணி வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 8 ஆயிரம் போ் மனு

பணி வழங்கக் கோரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளித்தனா். முறையான பணி வழங்கக் கோரி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி வட்டாரங்கள... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோ... மேலும் பார்க்க

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரிய... மேலும் பார்க்க