திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
முதல்வா் திறனாய்வுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
முதல்வா் திறனாய்வுத் தோ்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவா்களின் திறனை கண்டறியவும், அவா்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ஆம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் போ் வரை தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
அதன்படி, நிகழாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தோ்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை ஒரு லட்சத்து 43,351 மாணவ,மாணவிகள் எழுதினா். இதன் முடிவுகள் வியாழக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. இதையடுத்து மாணவா்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஊக்கத்தொகை பெறுவதற்கு தோ்வான மாணவா்களின் பட்டியலும் மேற்கண்ட வலைதளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.