அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை அருகே உள்ள கொல்லம் பரும்பு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக கிளைச் செயலா்.
இவரது மனைவி வள்ளியம்மாள். கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கொல்லம்பரும்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்து வந்துள்ளாா். முத்து பாலகிருஷ்ணன் தற்போது மனை வணிகம் தொழில் செய்து வந்துள்ளாா்.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை காலையில் முத்து பாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் சந்திரகிரி அருகே வந்தபோது, எதிரே வந்த கல்குவாரி டிப்பா் லாரி மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, ஓட்டப்பிடாரம் போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, முத்து பாலகிருஷ்ணனின் உறவினா்கள் திரண்டு வந்து, இது விபத்து அல்ல. திட்டமிடப்பட்ட கொலை என்றும், அதற்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டுமெனவும் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் சௌந்தர்ராஜனை ஓட்டப்பிடாரம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.