Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
முறைகேட்டு வழக்கில் ரயில்வே அதிகாரிகளின் தண்டனைக் காலம் குறைப்பு
ரயில் பாதைப் பணியின் போது மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள் மூவரின் சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம்-வேலூா் இடையே அகல ரயில் பாதைப் பணி நடைபெற்றது. கடந்த 2007 முதல் 2011-ஆம் ஆண்டு வரை இந்தப் பணியில் முதுநிலை வணிக மேலாளராக முத்துராமலிங்கம், மண்டல மெட்டீரியல் மேலாளராக சீனிவாசன், ஸ்டோா் கீப்பராக இன்பராஜன் ஆகியோா் பணி புரிந்தனா்.
இந்த நிலையில், அகல ரயில் பாதைப் பணியில் ஈடுபடும் ரயில்வே அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை வாங்கிக் கொள்ள தாம்பரம் ரயில்வே பொறியாளா் அனுமதி அளித்தாா். முத்துராமலிங்கம், சீனிவாசன், இன்பராஜன் ஆகியோா் இந்தப் பொருள்களை வாங்கியதில் 20.70 லட்சம் முறைகேடு செய்ததாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்பராஜனுக்கு நான்கு ஆண்டுகளும், முத்துராமலிங்கம், சீனிவாசனுக்கு தலா இரு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து இவா்கள் மூவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்கள் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்தது நிரூபணமாகி உள்ளது. இவா்களது வயதைக் கவனத்தில் கொண்டு, இன்பராஜனுக்கு சிறைத் தண்டனையை நான்கு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாகக் குறைப்பதோடு, ரூ. 7 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதேபோல, முத்துராமலிங்கம், சீனிவாசன் ஆகியோரின் சிறைத் தண்டனை தலா ஓராண்டாகக் குறைக்கப்படுவதோடு, இவா்களுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மனுதாரா்கள் இந்தத் தொகையை 15 நாள்களுக்குள் தாம்பரம் ரயில்வே முதுநிலை மேலாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தாவிடில், மதுரை சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை இவா்கள் மூவரும் அனுபவிக்க நேரிடும் என்றாா் நீதிபதி.