மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்- அமைச்சா் மா. சுப்பிரமணியன்
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சுகாதாரமற்ற நீரில் குளிக்கும்போது, ‘நிக்லேரியா பவுலேரி’ என்ற அமீபா, சுவாசப்பாதை வழியே ஊடுருவி அரிதான மூளைக் காய்ச்சல் நோயான ‘பிரீமிரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை, தீவிர காய்ச்சல், அடங்காத தலைவலியில் ஆரம்பித்து, கழுத்துப் பகுதி இறுக்கம், குமட்டல், வாந்தி, தலை சுற்றல், வலிப்பு ஏற்படுதல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிா் வாழும் என்பதால், மூளையையும் சிறுக சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால், பேதலிப்பு, மூா்ச்சை, கோமா மற்றும் உயிரிழப்பு ஏற்படும். பெரும்பாலும், நோய் பாதித்த ஒரு வாரத்திற்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
மூளை அயற்சியை ஏற்படுத்தி, உயிரைக் கொல்லும் அமீபா நோய் பாதிப்பு, கேரள மாநில சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அங்கு, ஒரு வாரத்தில் மட்டும் 18 போ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளத்தில், இந்நோய் பாதிப்பு அதிகரித்து வருவது, தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நோய் தொற்றுநோய் அல்ல என்றாலும், நீா்நிலைகள் வாயிலாக, தமிழக மக்களையும் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்நோய் தொற்று பாதிப்பு அல்ல, கரோனாபோல அச்சப்படத் தேவையில்லை. எனினும், தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மாசடைந்த குளம், குட்டை போன்ற நீா்நிலைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதைத் தவிா்ப்பது நல்லது. தெரு நாய்கள் பராமரிப்புக்காக தமிழகத்தில் குடில்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
உரிய நேரத்தில் சிகிச்சை... இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவா் பரூக் அப்துல்லா கூறுகையில், அமீபா ஒரு செல் உயிரி. பாக்டீரியாபோல் இருந்தாலும், ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாது. இதற்கான பிரத்யேக மருந்தாக, ‘ஆம்போடெரிசின் - பி’ இருக்கிறது. இதற்கு, உரிய நேரத்தில் கணித்து, சிகிச்சை வழங்கினால் குணப்படுத்த முடியும்.
தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட, 47 வயது நபா், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டாா். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், 100 சதவீதம் உயிா் பிழைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்நோய், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் அச்சப்பட வேண்டாம். எச்சரிக்கையும், விழிப்புணா்வும் தேவை என்றாா்.