தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது: சந்திரபாபு நாயுடு
அமராவதி: ‘மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய் மொழியில் கல்வி கற்பவா்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனா்’ என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
தமிழகத்தின் இந்த நிலைப்பாடு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகா் பவன் கல்யாண், ‘லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழக அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கின்றனா்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவா்கள், ஹிந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனா்?’ என்று கேள்வி எழுப்பினாா்.
இவரது கருத்துக்கு தமிழக அரசியல் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட பவன் கல்யாண், ‘ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும்; ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிா்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உகந்ததல்ல’ என்று பதிவிட்டாா்.
இந்த நிலையில், இந்த மொழி விவகாரம் குறித்து ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை பேசியதாவது:
மொழி என்பது தகவல்தொடா்புக்கானது மட்டுமே. மொழியால் அறிவு வளா்ந்துவிடாது. தாய்மொழியில் கல்வி கற்பவா்கள் மட்டுமே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்கி வருகின்றனா். தாய்மொழியில் கல்வி கற்பது எளிது.
அதுபோல, மொழி என்பது வெறுப்புக்குரியது அல்ல. ஆந்திரத்தில் தெலுங்கு தாய்மொழியாக உள்ளது. தேசிய மொழியான ஹிந்தியும், சா்வதேச மொழியான ஆங்கிலமும் இங்கு பயன்பாட்டில் உள்ளன.
வாழ்வாதாரத்துக்காக தாய்மொழியை மறக்காமல், பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது அவசியமாகும். தேசிய மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், நாடு முழுவதும் ஹிந்தியில் தங்கு தடையின்றி பேச முடியும்.
எனவே, மொழியை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது. முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என்றாா்.