திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்!
மோசடி வழக்கு: ``10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்" -நடிகர் சோனு சூட்க்கு எதிராக கைது வாரண்ட்!
பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா. இவர் லுதியானா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அதன் அடிப்படையில், ரூ.10 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் அது போலி கிரிப்டோ கரன்சி என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சோனு சூட் உள்ளிட்டவர்களிடம் விசாரிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் நடிகர் சோனுசூட்டுக்கு பலமுறை சம்மன் அனுப்பியிருக்கிறது.
ஆனால், அது எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது. நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.
இந்த நிலையில், நீதிபதி ராமன்பிரீத் கவுர், ``இத்தனைமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத சோனுசூட் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். 10-ம் தேதிக்குள் அவர் கைது செய்யப்பட வேண்டும். அப்படி கைது செய்யப்படவில்லையென்றால், நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்" என மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்துக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறார்.