``வயித்துல குழந்தை இருக்கு, விட்டுடு தம்பினு கெஞ்சினேன்’’ - நெஞ்சை உறைய செய்த கர்ப்பிணி வாக்குமூலம்
வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.
கை, கால் முறிந்து, தலையில் பலத்த காயத்துடன் அந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமந்த்ராஜ் என்ற இளைஞன் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறான். இந்த வழக்கோடு சேர்த்து, பெண்களுக்கெதிரான மூன்று குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறான் ஹேமந்த்ராஜ்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீரோடு விவரிக்கும் வீடியோ வெளியாகி, நெஞ்சை உறைய செய்திருக்கிறது.
அந்த வீடியோவில், ``நான், திருப்பூரில் நேற்று காலை 6.50 மணிக்கு டிரைன் ஏறுனேன். ஜோலார்பேட்டை வரும்போது மணி 10.45 இருக்கும். கூட பயணம் செஞ்ச மத்த லேடீஸ் ஜோலார்பேட்டையிலயே இறங்கிட்டாங்க. டிரைன் மூவ் ஆகும்போது இந்த பையன் ஏறிட்டான். `லேடீஸ் கோச் இது. நான் ஒரு ஆள் தான் இருக்கேன். நீங்க இறங்கியிருங்க’னு சொன்னேன். `டிரைன் மூவ் ஆகிடுச்சி. அடுத்து வர காட்பாடியில இறங்கிடுறேன். அது வரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜெஸ்மெண்ட் பண்ணிக்குங்க’னு அவன் சொன்னான். `சரி’னு நான் பாட்டுக்கு ஒரு ஓரமா உட்காந்துக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் நேரம் அவன ஆளக் காணோம். அப்புறம், பாத்ரூமில் இருந்து டிரஸ் கழட்டிட்டு என் கிட்ட வந்தான். என் டிரஸ்ஸையும் கழட்ட பாத்தான்.
`என் வயித்துல குழந்தை இருக்கு’
நான் கெஞ்சினேன். `என் வயித்துல குழந்தை இருக்கு. நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது. உனக்கும் அக்கா, தங்கச்சிங்க இருப்பாங்க. தயவு செஞ்சி என்னை விட்டுடு தம்பி’னு சொன்னேன். செயின் இழுக்கிறதுக்காக சீட் மேலே ஏறுனேன். என் தலை முடியை பிடுச்சி தரதரனு இழுத்து அடிச்சான். நானும் முடிஞ்ச அளவுக்கு அவன அடிச்சேன். பாத்ரூம் உள்ள தள்ளி லாக் பண்ணிடலாம்னு நெனச்சேன். அவன் என்ன கீழே தள்ளிவிட பார்த்தான்.
`இந்த சைகோவை வெளிய விடாதீங்க’
நானும் கீழ விழாத அளவுக்கு கெட்டியா புடுச்சிட்டிருந்தேன். உதைச்சி ரைட் சைடு கையை உடைச்சிட்டான். ஒரு கை சப்போர்ட்டுலதான் பிடிச்சிட்டு இருந்தேன். அப்புறம் எட்டி உதைச்சி கீழ தள்ளிட்டான். கீழ விழுந்த பிறகு என்ன நடந்ததுனு தெரியல. தலையில இருந்து ரத்தம், சதை கொட்டுச்சி. எனக்கு மயக்கம் வந்துடுச்சி. அவன்கிட்ட அரைமணி நேரம் போராடுனேன். எனக்கு நடந்தா மாதிரி வேற எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாது. அவனுக்கு முடிஞ்ச அளவுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்க. `அடுத்த பொண்ணுக்கு நடக்காது’னு என்ன காரணம் இருக்கு? கண்டிப்பாக நடக்கும். இந்த சைகோவை வெளிய விடாதீங்க. மக்கள் கொடுக்கச் சொல்லும் தண்டனையைக் கொடுங்க. பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாமல் போய்டுச்சி. டிரைனிலும் பாதுகாப்பில்லை. நடந்துச் செல்லும்போதும் பாதுகாப்பில்லை’’ என்று சொல்லி முடிக்கும்போது, கலங்கடிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs