OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அத...
மோசடியாளர் என எஸ்பிஐ அறிவிப்பு! அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
புது தில்லி: கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என பாரத ஸ்டேட் வங்கி நேற்று அறிவித்திருந்த நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனையைத் தொடங்கியிருக்கிறது.
அம்பானியின் சொந்த வீட்டில் மட்டும் சோதனை நடத்தப்படவில்லை. அவரது அலுவலகங்கள், குழுமத்தின் துணை நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையிலும், இரண்டு வங்கிகள் கொடுத்திருக்கும் புகாரின் பேரிலும், செபி உள்ளிட்ட சில அமைப்புகளின் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த சோதனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அனில் அம்பானிக்குத் தொடர்புடைய மும்பை, தில்லியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடன் மோசடியாளர் என அறிவிக்கக் காரணமாக இருந்தது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஒரு சில வங்கிகளிடமிருந்து கூட்டாக ரூ.31,580 கோடி கடன்களைப் பெற்றுள்ளன. எஸ்பிஐ வங்கியின் மோசடி கண்டறியும் குழு அளித்த அறிக்கையின்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்கிய மொத்த கடனில் 44 சதவீதமான ரூ.13,667.73 கோடி ஏற்கெனவே வாங்கிய கடன்நிலுவையை திரும்ப செலுத்தப் பயன்படுத்தியுள்ளது. சுமாா் 41 சதவீத கடனான ரூ.12,692.31 கோடி, துணை நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்றப்பட்ட கடன்தொகை ரூ.41,863.32 கோடியாக உள்ள நிலையில், அதில் ரூ.28,421.61 கோடியின் பயன்பாட்டைகண்டறிவதற்கு மட்டுமே தரவுகள் உள்ளன. இந்த நிலையில்தான், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி மீது ரிசா்வ் வங்கியில், எஸ்பிஐ வங்கியானது புகாரளிக்க முடிவெடுத்திருக்கிறது.
அனில் அம்பானிக்குச் சொந்தமாக இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் முதல் தீா்வு செயல்முறை (சிஐஆா்பி) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடன் மோசடி என வகைப்படுத்தப்பட்ட கணக்குதாரா்கள், கடனாகப் பெற்று மோசடி செய்யப்பட்ட தொகையாக மதிப்பிடப்பட்டிருக்கும் தொகையை முழுமையாக வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்திய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்குத் தடை விதிக்கப்படும்.
இந்தத் தடைக்குப் பிறகு இவா்களுக்கு கடன் வழங்குவது குறித்து அந்தந்த வங்கிகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவா்களின் கடன் கணக்குகளுக்கு மறுசீரைமைப்பு, கூடுதல் கடன் போன்ற எந்த வசதிகளும் அனுமதிக்கப்படாது.