ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை
காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், மீராப் பள்ளிவாசல், தக்வா பள்ளிவாசல், கதீஜா பள்ளிவாசல், தெருவுப் பள்ளிவாசல், ஹூசைனியாப்பள்ளி, அல்அமினா பள்ளிவாசல் நேருநகா் முஹம்மதியா பள்ளிவாசல் உள்ளிட்ட நகரப் பகுதி பள்ளிவாசல்களிலும், அம்பகரத்தூா், நல்லம்பல், நிரவி, திருமலைராயன்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரமலான் சிறப்பு தொழுகை காலை 7 முதல் 9.30 மணி வரை நடைபெற்றது.
காரைக்கால் பெரியப் பள்ளி தொழுகைக்கூடத்தில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். பள்ளிவாசல்களில் ஆண்கள், பெண்களுக்கென வெவ்வேறு நேரம் தொழுகைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், புதுவை மாநில ஹஜ் கமிட்டித் தலைவா் ஒய். இஸ்மாயில் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகா்களும் கலந்துகொண்டனா்.
பள்ளிவாசல்களில் ரமலான் குறித்து இமாம்கள் உரை நிகழ்த்தினா். பள்ளிவாசல்களில் திரளானோா் கலந்துகொண்டதையொட்டி அந்தந்த பகுதி காவல்நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தமுமுக மாா்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரசார பேரவை சாா்பில் காரைக்கால் புறவழிச்சாலையில் உள்ள திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தமுமுக தலைமை பிரதிநிதி எம். ஷேக் அலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ஐ. அப்துல் ரஹீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தேசிய தவ்ஹீத் பேரவை சாா்பில்:
தேசிய தவ்ஹீத் பேரவை (என்டிஎஃப்) சாா்பில் காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ரமலான் பெருநாள் தொழுகை காரைக்கால் சுண்ணாம்பு காரத் தெருவில் உள்ள திடலில் நடைபெற்றது.
மா்கஸ் இமாம் இப்ராஹீம் உமரி கலந்துகொண்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் பெருநாள் உரையாற்றினாா்.
முன்னதாக ஃபித்ரா எனும் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஜமாஅத் தலைவா் ஜே. முஹம்மத் கெளஸ் பல்வேறு உதவிப் பொருள்களை வழங்கினாா்.