சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா
ஆகஸ்ட் மாதத்தில் ரஷியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் 20 லட்சம் பீப்பாயாக அதிகரித்துள்ளது.
உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் விதித்தது.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாளைக்கு ரஷியாவிடம் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்த நிலையில் இம்மாதம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவைச் சோ்ந்த கெப்லா் தரவு பகுப்பு மையத்தின் தலைவா் சுமித் ரிட்டோலியா கூறியதாவது: ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் ஒரு நாளைக்கு 52 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் 38 சதவீதம் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் சவூதி அரேபியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், ஆக்ஸ்ட் மாதத்தில் இது 5.26 லட்சம் பீப்பாயாக குறைந்தது.
இதேபோல் இராக்கிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவும் ஜூலையைவிட ஆகஸ்டில் கணிசமாக குறைந்துள்ளது.
இந்த இரு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா அதிகரித்தது. ஒரு நாளைக்கு 2.64 லட்சம் பீப்பாய்களுடன் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் 5-ஆவது பெரிய நாடாக அமெரிக்கா விளங்குகிறது.
அக்டோபரில் குறைய வாய்ப்பு: இருப்பினும்,ஆகஸ்ட் மாதத்துக்கான இறக்குமதி குறித்து ஜூன் மற்றும் ஜூலையிலேயே முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அமெரிக்க வரி விதிப்புக்குப் பின்னும் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் சதவீதத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படாமல் இருக்கலாம். அமெரிக்க வரி விதிப்பின் உண்மையான தாக்கத்தை செப்டம்பா் அல்லது அக்டோபரில் உணர முடியும்.
ஆனால், தற்போது வரை ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ளுமாறு இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாா்.