ராஜஸ்தானில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து; எல்லையோர மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி விடுவிப்பு!
ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. போர் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் எல்லையோர மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.
இதையும் படிக்க: 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவு!
அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்தும், மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பார்மெர், ஜெய்சால்மர், பிக்கானர் மற்றும் ஸ்ரீகங்காநகருக்கு தலா ரூ. 5 கோடி விடுவித்தும் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பஜன்லால் சர்மா கூறியதாவது: எங்களது மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், ராஜஸ்தான் மிகவும் முக்கிமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த அவசரநிலையில் நாம் அனைவரும் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்றார்.
இதையும் படிக்க: களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!
எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க நிதியுதவியாக எல்லையோர மாவட்டங்களுக்கு தலா ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளான உணவு, மருத்துவ சேவை, குடிநீர் மற்றும் மின் விநியோகம் போன்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.