ராஜஸ்தானுடன் இணைந்தார் 13 வயது வீரர்! ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டவர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் மிக இளம் ஐபிஎல் வீரர் என்ற பெருமையை பெற்ற வைபவ் சூரியவன்ஷி இணைந்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நினைவுகூரத்தக்கது.
ரூ.1.10 கோடிக்கு ஏலம்
ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்தாண்டு இறுதியில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலை கொண்ட வைபவ் சூரியவன்ஷியை, ரூ.1.10 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்து, ஐபிஎல் தொடரில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.
12 வயதில் படைத்த சாதனைகள்
ரஞ்சி டிராபியில் பிகார் அணிக்காக தனது முதல் தரப்போட்டியில் அறிமுகமானவர் வைபவ் சூரியவன்ஷி. பிகாருக்காக ரஞ்சி டிராபியில் விளையாடிய இரண்டாவது இளைய வயதுடையவர் ஆவார்.
பிகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடி 5 போட்டிகளில் சுமார் 400 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச போட்டியில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றவர்.
19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை, 19 வயதுக்குள்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார்.
1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான மிகவும் இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர்.
இதையும் படிக்க : இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
இந்த நிலையில், அணியுடன் இணைந்த வைபவ் சூரியவன்ஷியை வரவேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் விடியோவை வெளியிட்டுள்ளது.
வருகின்ற மார்ச் 23ஆம் தேதி ராஜஸ்தான் விளையாடவுள்ள முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வைபவ் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.