Klaasen: "2027 உலகக் கோப்பை வரை விளையாடத் திட்டம்; ஆனால்..." - ஓய்வு குறித்து க்...
ராமநாதபுரம்: கார் - வேன் மோதல்; ஐ.டி. ஊழியர், 13 வயது சிறுமி பலியான சோகம்; என்ன நடந்தது?
கடலூர் மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர், வேன் ஒன்றில் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து கீழக்கரையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளனர்.
இவர்கள் ராமேஸ்வரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது நதிப்பாலம் அருகே ஒருவரை ஒருவர் முந்த முயன்றுள்ளனர்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், காரின் மீது மோதிய வேகத்தில் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த கூடலூரைச் சேர்ந்த சிறுமி மகாலட்சுமி (13) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதே போல் காரில் பயணம் செய்த கீழக்கரையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் வெங்கடேஷ் (27) என்பவரும் இடிபாடுகளில் சிக்கிப் பலியானார். மேலும் வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கேணிக்கரை போலீஸார் மற்றும் ராமநாதபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்களைச் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழக்கரையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் வெங்கடேஷிற்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு, தனது நண்பர்களுடன் இன்று அதிகாலை ராமேஸ்வரம் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.