ராமநாதபுரம்: ``ரூ.56 கோடி வீணானது; இந்த முறையாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா?'' - தவிக்கும் மக்கள்
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம், பல வருடங்களாக வெற்றிகரமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அடுத்து, 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது இதற்கு தேவையான நிதி வழங்காமல் மூடப்பட்டது.
296 கிராமங்கள்பாதிப்பு
இதனை அடுத்து இந்த பகுதியை சுற்றியுள்ள 296 கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. இக்கிராமத்து மக்கள் குடிநீருக்காக குடம் ஒன்றுக்கு ரூ.5,10 என்று பணம் கொடுத்து குடிநீரை வாங்குகிறார்கள்.
அது மட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் கிடைத்த தண்ணீரில் சமையல் செய்யும் பொழுது அரிசி சாதம் கெடாமல் இருக்கும் என்று கூறும் மக்கள், இந்த திட்டம் செயல்படாமல் போன பின்பு பல கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருவதாக வேதனையுடன் கூறினர்.




சில கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஆழ்துணை கிணறு அமைத்ததாகவும் இப்பொழுது அதுவும் உப்பு நீராக கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த திட்டம் மூடியபின் இந்த பகுதியைச் சுற்றிவுள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை நடத்தினர். அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. இந்த திட்டத்திற்காக ரூ.56 கோடிக்கும் மேல் அரசு செலவு செய்த பணம் வீணாகியுள்ளது என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இத்திட்டத்தில் பணியாற்றிய 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை?
இத்திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் அணுகிய போது அவர்கள் கூறியதாவது, "இத்திட்டத்தில் பணிபுரிந்த நாங்கள் 1998 முதல் மிகவும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வந்தோம். இந்த நிலையில் திடீரென்று 2013-ல் இத்திட்டத்தை நிறுத்தி சுமார் 15 வருடங்களாக தொடர்ந்து வேலை பார்த்த எங்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி விட்டனர். இதனால் மிகவும் மனம் உடைந்த நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.

அதன் பலனாக எங்களுக்கு 2020-ல் எங்களை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணைப்பிறப்பித்தது. அதன்பின் 2021 மார்ச் மாதம் முதல் அப்போதைய அதிமுக (எடப்பாடி) அரசு எங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் நிரந்தரப் பணி வழங்கிவிட்டு வெறும் 15,000 மட்டும் மாத சம்பளமாகவும் மேற்கொண்டு எந்த அலோவன்சும் (allowance) கிடையாது என்ற உத்திரவாதத்துடன் பணி நியமனம் செய்தது.
நாங்களும் வேறு வழியின்றி இந்த குறைந்த ஊதியத்தில் மனவேதனையுடன் பணியாற்றி வருகிறோம். மேலும், இந்த ஆணையை எதிர்த்து வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளோம். ஆகையால் தற்போதுள்ள திமுக அரசு எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்களுக்கும் உரிய பணப்பலன்கள் கிடைக்க ஆவண செய்யும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்து வருகிறோம்" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

தீர்வுதான் என்ன?
இதனைப் பற்றி குடிநீர் வடிகால் அதிகாரி ஒருவரை அணுகியபோது,
“இதில் அரசின் கருத்துப்படி இதனை மூடியதுக்கு முக்கியமான காரணங்கள் என்னவென்றால் 1000 லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றுவதற்க்கு 150 ரூபாய் தேவைப்படும் அதே ரிவர் சோர்ஸை நல்ல தண்ணீராக மாற்றுவதற்கான தொகை 1000 லிட்டர்க்கு 10 ரூபாய் அளவிலே தேவைப்படும். அதனால்தான் இத்திட்டதை மூடிவிட்டு காவேரி நீரை இப்பகுதிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை உருவாக்கினர். இத்திட்டதின் செயல்பாடுகள் 90% முடிந்து விட்டது” என அவர் கூறினார்.
அதிகாரி கூறியபடி, மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் காவேரி நீர் திட்டத்தை விரைவில் கொண்டு வந்தால் அது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.