``நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்; ஓட்டுநர் பேஷண்ட் ஆகிவிடுவார்'' - பகிரங்கமாக எச்சரித்த எடப்பாடி பழனிசாமி
பிரசார கூட்டத்துக்கு மத்தியில் ஆம்புலன்ஸ்
அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு வந்து, ஆரவாரத்தோடு குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் தனது பிரசார உரையைத் தொடங்கினார்.
அப்போது, கூட்டத்துக்கு நடுவே திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று புகுந்தது. மாற்று வழி இருக்கும்போது, கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் நுழைவதை பார்த்து சந்தேகப்பட்ட எடப்பாடி பழனிசாமி, `ஆம்புலன்ஸில் ஆள் இருக்காங்களா, இல்லையா? ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் நடக்குது. நிறுத்திப் பார்க்கச் சொல்லுங்க’ என்றார்.

நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்
`ஆம்புலன்ஸில் நோயாளி இல்லை’ எனத் தெரியவந்ததும் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, ``யே, நிறுத்துயா! யாரும் அடிக்காதீங்க. எதுவும் பண்ணாதீங்க. தம்பி விட்டுருங்க, போகட்டும். ஆம்புலன்ஸ் வாகனத்தோட நம்பரைக் குறிச்சி வச்சிக்கிட்டு நாளைக்கு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுங்க.
வேணும்னே கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸை விட்டு கலாட்டா பண்றாங்க. ஒவ்வொரு முறையும் நான் பொதுக்கூட்டம் போடும்போது ஆம்புலன்ஸ் விடுறாங்க. இந்த அரசாங்கத்துக்கு கேவலமா இல்ல? எதிர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு தில் வேணும். அரசியல் ரீதியாக எதிர்க்கணும். அதை விட்டுட்டு கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸை விட்டு பிரச்னை பண்றது சரியா?
டென்ஷனான எடப்பாடி பழனிசாமி
இந்த அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை. இது மாதிரி ஆயிரம் ஆம்புலன்ஸ் விட்டாலும் மக்கள் மனதை மாற்ற முடியாது.
கிட்டத்தட்ட 20, 30 கூட்டத்தில் இதுமாதிரி ஆம்புலன்ஸ் விடுவது, வேண்டுமென்றே கூட்டத்தில் கலாட்டா செய்வது, இது ஒரு கேவலமான அரசாங்கம். தில், திராணி, தெம்பு இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்த்து பார்க்கணும்.

நோயாளியே போகல. வேறு வழியும் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு வெறும் ஆம்புலன்ஸை, மக்கள் குழுமி இருக்கிற கூட்டத்தில் விட்டு மக்களுக்கு கஷ்டத்தை உண்டாக்கி, யாருக்காவது அடிப்பட்டால் யார் பொறுப்பு?
இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுறோம். அடுத்த முறை ஆம்புலன்ஸ் வெறும் வண்டி வந்தால், ஆம்புலன்ஸை யார் ஓட்டிக்கிட்டு வருகிறார்களோ, அவர் பேஷண்ட்டாக மாறி ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டிய நிலைமை ஆகிவிடும்.
அசிங்கமா இல்லை. பிரதான எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது. அரசாங்கம் எப்படி பாதுகாப்பு கொடுக்கணும்? இதெல்லாம் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கணும். சட்டப்படி புகார் கொடுங்க. போலீஸ் நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார் காட்டமாக.