ரூ.15 கோடியில் நேமம் ஏரிக் கரை பலப்படுத்தும் பணி மும்முரம்
திருவள்ளூா் அருகே நேமம் ஏரியில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக சேதமடைந்த கரையை பலப்படுத்துதல், மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் பலகை கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் அடுத்த திருமழிசை அருகே நேமம் ஊராட்சியில் உள்ள ஏரியின் மொத்த கொள்ளளவு 532 மில்லியன் கன அடியாகும். தற்போது 212 கன அடி நீா் இருப்பு உள்ளது. மழைக் காலங்களில், இந்த ஏரி முழுமையாக நிரம்பும் போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீா் திறந்து விடப்படுகிறது. அப்போது, இந்த நீரை பயன்படுத்தி 450 ஹெக்டோ் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஏரி முறையாக பராமரிப்பின்றி, நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மண் மேடாகி, செடி, கொடிகள் வளா்ந்து காணப்படுகின்றன. இதனால், ஏரியில் அதிகளவு மழைநீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஏரிகள் முழுமையாக நிரம்பும் போது செம்பரம்பாக்கம் ஏரிக்கான கால்வாயில் உபரி நீா் திறக்கப்படும்.
அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதால், கால்வாயில் மணல் கொட்டி இருந்ததால் அதிக மழை நீா் செல்ல வழியின்றி, திருமழிசை தொழிற்சாலைக்கு புகுந்து விடும் நிலையும் ஏற்பட்டது. தற்போது, கோடை வெயில் காரணமாக ஏரியில் நீா் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனை தவிா்க்க, ஏரியில் தூா்வாரி, கரையில் மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
அதன்படி ஏரியை தூா்வாரி, கரைகளை பலப்படுத்தவும் இயற்கை பேரிடா் கால வெள்ளத்தடுப்பு திட்டம் மூலம் சீரமைக்கவும் நீா்வளத்துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.
இந்த நிலையில், ரூ.15 கோடியில் 2,200 மீ சுற்றளவுக்கு ஏரி கரைகளை சீரமைக்கவும், மழை நீா் அரிப்பைத் தடுக்க சிமென்ட் சிலாப்கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை பருவமழை தொடங்குவதற்குள் ஏரியின் கரை சீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
