டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
ரூ. 25 லட்சம் இழப்புக்கு ரூ. 10,000 உதவித்தொகை! ஜம்மு - காஷ்மீர் மக்கள் அதிருப்தி!
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான வீடு சேதமடைந்திருக்கும் நிலையில், அரசு தரப்பில் இழப்பீடாக வெறும் ரூ. 10,000 மட்டுமே வழங்கப்பட்டதாக ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் தங்தார், கர்னா மற்றும் உரி ஆகிய எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மூன்று நாள்களுக்கு மேலாக ஷெல் மற்று பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த பலர் பலியான நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் கடுமையான சேதமடைந்தது.
இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லையோர கிராமமான சோனோராவைச் சேர்ந்த முகமது மக்பூல் கான் கூறுகையில், ஷெல் தாக்குதலால் தனது வீடு முழுமையாக சேதமடைந்ததாகவும் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷெல் தாக்குதலில் இடிந்த வீட்டின் பாகங்களை அகற்றுவதற்கே ரூ. 15,000 செலவு செய்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை ஆராய்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் இழப்பீடாக ரூ. 10,000 கொடுத்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதேபோல், எல்லையோர பரம்பில்லா கிராமத்தில், பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் சையத் முஸ்தபா என்பவரின் சகோதரியின் வீடும் மோசமாக சேதமடைந்துள்ளது.
அவர் கூறுகையில், “வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் என வெளிப்புறம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், உரிய இழப்பீடை வழங்காமல் வெறும் ரூ. 6,500 மட்டுமே அரசு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உரி பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களின் ரூ. 35 முதல் 40 லட்சம் மதிப்பிலான வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அரசு தரப்பில் தலா ரூ. 1.30 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற நிலைதான் பாகிஸ்தான் தாக்குதலில் வீடுகளை இழந்த அனைவருக்கும் நேர்ந்துள்ளதாக குறிப்பிடும் பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு போதுமான இழப்பீடை வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர்.