ரூ. 500 கோடி பட்ஜெட் திரைப்படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?
பிரம்மாண்ட திரைப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள். இதில், இளையராஜாவும் ரஹ்மானும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் பெரும்பாலான 2கே தலைமுறையின் தேர்வு அனிருத்தாகவே இருக்கிறது.
அனிருத்துக்கு அடுத்து 20-வயதான சாய் அபயங்கர் என்கிற இசையமைப்பாளர் பெரிதாகப் பேசப்படுவார் என பலரும் கணித்துள்ளனர்.
காரணம், ‘கட்சி சேர’, ‘ஆச கூட’, 'சித்ரி புத்ரி’ ஆல்பம் பாடல்களால் இசையமைப்பாளராக, பாடகராகக் கவனிக்கப்பட்ட சாய் அபயங்கர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் பென்ஸ், சூர்யா - 45, பிரதீப் ரங்கநாதன் படம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதைவிட தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளாராம். இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் அறிவியல் புனைகதையாக உருவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன் இசையில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், சாய் அபயங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் செய்தி ரசிகர்களிடம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: 72 படங்களில் 5 படம்தான் ஹிட்!