ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!
திருவள்ளூரில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
மேலும், இதற்காக எத்தனை பேரிடம் அவர்கள் லஞ்சம் பெற்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகாபலிபுரம் வரை செல்லும் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்திய அரசு, அதற்காக இழப்பீட்டுத் தொகையாக சுமார் ரூ.45 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
இத்தொகையை பெற நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடம் அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆஸ்டின் ஜோசப் பலமுறை கேட்டும், அவர் காலதாமதம் செய்து வந்தாராம். இந்த நிலையில் ரூ.1 லட்சம் கொடுத்தால் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையை விடுவிப்பதாகவும் தெரிவித்தாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தின் மேலாளர், லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு புகார் செய்தார். அதன்பேரில், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துணைக்காவல் கண்காணிப்பாளர் கணேசன் வழிகாட்டுதலின்படி, முதல்கட்டமாக ரசாயனம் தடவிய ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடமும் அதனைத்தொடர்ந்து இடைத்தரகர்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோரிடம் அந்நிறுவன ஊழியர் கொடுத்தாராம். அப்போது மறைந்திருந்த ஆய்வாளர் மாலா தலைமையிலான போலீஸார் தனி வட்டாட்சியரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவரிடம் லஞ்சமாக கொடுத்த ரொக்கத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் முகவர்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல், இதுவரை அரசு கையகப்படுத்திய நிலம்m கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்க எவ்வளவு ரொக்கம் லஞ்சம் வாங்கியுள்ளனர் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் துருவி, துருவி மூவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.