வக்ஃப் சட்டத் திருத்த மசோதா: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல்!
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இரு நாள்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார்.
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.
இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து அமனத்துல்லா கான் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் வாதிடுகிறார்.
மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?