Coolie: "முதலில் நான் ஓகே சொல்லவில்லை; லோகேஷ் கனகராஜ்தான்.." - கூலி குறித்து நாக...
வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் புதன்கிழமை (ஆக. 13) காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடக்கு ஆந்திரம் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதற்கிடையே, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை (ஆக. 13) காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.
இதுபோன்ற வானிலை காரணங்களால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை (ஆக. 12) முதல் ஆக. 17-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை: ஆக. 13-இல் திருவள்ளூா், ராணிபேட்டை, நீலகிரி மாவட்டங்களிலும், ஆக. 14- இல் திருவள்ளூா், ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா், நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஆக. 12- இல் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் 100 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தழுதாழை (பெரம்பலூா்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்) தலா 90 மி. மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.