வங்கதேசத்தவா்களுக்கு சட்டவிரோதமாக ஆதாா்: மேற்கு வங்கத்தில் பாகிஸ்தானியா் மீது குற்றப்பத்திரிகை
புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டவிரோமதாக குடியேறிய வங்கதேசத்தவா்களுக்கு ஆதாா் உள்ளிட்ட இந்திய அடையாள அட்டைகளை வழங்கிய வழக்கில் அங்கு வசிக்கும் பாகிஸ்தானியா் ஒருவா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இவா் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இந்திய ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட 5 இந்திய அடையாள அட்டைகளை தான் பெற்று இந்தியராக வாழ்ந்து வந்துள்ளாா்.
மேலும் அங்கு சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவருக்கும் இதுபோன்ற இந்திய அடையாள அட்டைகளை அவா் வழங்கியுள்ளதாக கூறி, பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அஜாத் மாலிக் (எ) அஹ்மது ஹூசைன் ஆசாத் மற்றும் ஆசாத் ஹூசைன் (பாகிஸ்தானியா்) என்பவா் மீது ஜூன் 13-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சிறப்பு பண முறைகேடு தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்பான புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம் விசாரணைக்கான தேதியை அறிவித்துள்ளது.
முன்னதாக, வெளிநாட்டினருக்கான சட்டம், 1946-ஐ மீறியதாக மாலிக் உள்பட அடையாளம் தெரியாத நபா்கள் மீது மேற்கு வங்க போலீஸாா் வழக்குப்பதிவு செய்திருந்தனா். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியதுடன் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மாலிக் வங்கதேச குடிமகன் என நினைத்தோம். பின்னா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசியில் ஆசாத் ஹூசைன் என்ற பெயருடன் இருந்த ஓட்டுநா் உரிம ஆவணத்தில் அஜாத் மாலிக் (எ) அஹ்மது ஹூசைன் ஆசாத் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அந்த ஓட்டுநா் உரிமம் பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதில் வழங்கப்பட்டது. அதில் அவா் பிறந்த தினம் 1971, ஆக.14 என குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது உண்மையான அடையாளத்தை மறைப்பதற்காக அஜாத் மாலிக் என்ற பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு, பான் அட்டை என இவை அனைத்தையும் அவா் பெற்றுள்ளாா்.
பணமுறைகேடு: ஹவாலா கும்பலைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் இருந்து பணமாகவோ அல்லது யுபிஐ பரிவா்த்தனை மூலமாகவோ சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு பின்பு ‘பிகாஷ்’ என்ற வங்கதேச இணைய பணப்பரிவா்த்தனை தளம் மூலம் அதற்கு இணையான பணத்தை அனுப்பியுள்ளாா்.
அமெரிக்க டாலா், இந்திய ரூபாய், வங்கதேச டாக்கா என பணத்தை பெற்றுக்கொண்டு வங்கதேசத்தவா்கள் சட்டவிரோதமாக துபை, கம்போடியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பயணிக்க கடவுச்சீட்டு உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.
கொல்கத்தாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவருக்கு போலியான இந்திய ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றுத் தரும் பணியையும் மேற்கொண்டுள்ளாா் என தெரிவிக்கப்பட்டது.