செய்திகள் :

வங்கிகளே... ஏஜென்டுகளே... உங்கள் ‘டார்கெட்’டுக்கு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்!

post image

இன்ஷூரன்ஸ் பாலிசிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றை விற்றதன் மூலம் இந்தியாவின் 15 முன்னணி வங்கிகள் 2023-24 நிதி ஆண்டில் ரூ.21,773 கோடி வருமானம் ஈட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு பெருமிதப்படும் விஷயமாகத் தோன்றினாலும்... இதன் பின்னணியில் அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது அவசியம்தான். அதன்மூலம் வங்கிகள் வருமானம் ஈட்டுவதும் பிரச்னை யில்லை. ஆனால், தேவையில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும், மியூச்சுவல் ஃபண்டுகளையும் மக்கள் தலையில்கட்டும் ‘மிஸ் செல்லிங்’ என்பதுதான் இங்கு பிரச்னையே. இது பற்றி பலமுறை இன்ஷூரன்ஸ் துறை ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மக்கள் தலையில் வங்கிகள் கட்டுவதை ரிசர்வ் வங்கியும் கண்டித் துள்ளது. இதுதொடர்பாக விதிமுறைகளை வகுக்கவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. ஆனாலும், வங்கிகள் கட்டுப்படவில்லை என்பதே நிதர்சனம்.

கடன் வாங்கப் போனால் அதற்கு இன்ஷூரன்ஸ் கட்டாயம், ஃபிக்ஸட் டெபாசிட் செய்யப் போனாலும் இன்ஷூரன்ஸ் கட்டாயம், இந்தப் பாலிசியில் நீங்கள் 5 வருடம் பணம் போட்டால் போதும், 6-வது வருடத்திலிருந்து மாதம் தோறும் பணம் வரும்... இப்படியெல்லாம் பல வகைகளிலும் சொல்லி இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மக்கள் தலையில் கட்டிவருகின்றன வங்கிகள். வேறு வழியில்லாமல் அவற்றில் சேர்ந்துவிடுகின்றனர் மக்கள். கடைசியில், அவற்றுக்கு தொடர்ந்து பணம் கட்டமுடியாமல் பாதியிலேயே தவிக்கின்றனர்.

இதன்விளைவாக... 43.3% லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சரண்டர், இடைநிறுத்தம் மற்றும் ரத்து என்கிற கொடுமையான நிலை உருவாகியுள்ளது. ரிலேஷன்ஷிப் மேனேஜர்கள் என்று சொல்லப்படுபவர்களும், வாடிக்கையாளர் களுக்குச் சிறந்த சேவை வழங்க வேண்டும் என்றில்லாமல், எப்படியாவது டார்கெட்டை முடிக்க மட்டுமே கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

தொடர் புகார்களுக்குப் பிறகு, ‘வங்கிகள் பிரதான சேவைகளான டெபாசிட், கடன், பணப் பரிவர்த்தனை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டுமே தவிர, இன்ஷூரன்ஸ் விற்பதில் அல்ல’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால், அவருடைய துறையே இதற்கு முரணாகத்தான் செயல்படுகிறது. அது வங்கிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘2047-ல் எல்லோருக்கும் இன்ஷூரன்ஸ் என்கிற டார்கெட்டை இந்திய அரசு வைத்துள்ளது. பிரதான வங்கி சேவைகளோடு இன்ஷூரன்ஸில் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் தெளிவான மற்றும் கண்டிப்பான ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட வேண்டும். அந்த விதிகள் பின்பற்றப்படுவதைக் கண்காணித்து உறுதி செய்யவும் வேண்டும். இல்லையென்றால், வங்கிகளின் டார்கெட்டுக்கு மக்களை பலிகடா ஆக்குவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

- ஆசிரியர்