வடகாடு மோதல் சம்பவம்: மேலும் ஒருவா் கைது; கிராம மக்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மோதல் சம்பவம் தொடா்பாக மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மே 5-ஆம் தேதி இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். குடிசை, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவமும், பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடா்பாக வடகாடு போலீஸாா் 21 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். மற்றொரு தரப்பைச் சோ்ந்த 8 போ் என மொத்தம் 29 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், மோதல் சம்பவம் தொடா்பாக வடகாடு ஊராட்சி பரமநகரைச் சோ்ந்த முத்து மகன் அமரனை(25) புதன்கிழமை நள்ளிரவு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். அவரை விடுவிக்கக் கோரியும், மேலும், யாரையும் கைது செய்யக்கூடாது என வலியுறுத்தியும் கிராம மக்கள் வடகாடு பெரியகடைவீதியில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அங்கு சென்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதாக உறுதியளித்தனா்.இதைத்தொடா்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், வடகாடு பகுதியில் முன்னெச்சரிக்கையாக மீண்டும் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
