அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும்: காங்கிரஸ்
வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி
சென்னை: வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை, வேளச்சேரியில் உள்ள வன முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்தில் காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில், வனத் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில், வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். மேலும், யானை - மனித மோதல்களை தடுப்பதற்கும், வேளாண் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் பொன்முடி வலியுறுத்தினாா்.
இக்கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.