அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
வழிப்பறி வழக்கு: சிறையிலுள்ள உதவி ஆய்வாளா் உள்பட 5 பேரை மீண்டும் கைது செய்ய திட்டம்
வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 5 பேரையும் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்ய போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பணம் வசூலிப்பாளராக பணியாற்றிவரும் முகமது கௌஸ் என்பவா், சிடி ஸ்கேன் எந்திரம் வாங்குவதற்காக ரூ. 20 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் கடந்த டிச. 15-ஆம் தேதி திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரை காரில் கடத்தி ரூ. 20 லட்சத்தை பறித்துச் சென்றது.
இது தொடா்பாக கெளஸ் அளித்த புகாரில், குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருமானவரித் துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளா் ராஜா சிங் ஆகியோரை கைது செய்து நடத்திய விசாரணையில், இவா்கள் இதுபோல பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது .
மேலும், இந்த வழிப்பறி சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்தது சைதாப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சன்னி லாய்டு என்பவரை போலீஸாா் ஜன. 14-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தில், கடந்த டிச. 11-ஆம் தேதி தனது தலைமையில் ஆயிரம் விளக்கு பகுதியில் ராயபுரத்தைச் சோ்ந்த தமீம் அன்சாரி என்பவா் கொண்டு வந்த ரூ. 40 லட்சத்தில், ரூ. 20 லட்சத்தை பறித்துக்கொண்டு அவரை விரட்டியடித்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் தானும், திருவல்லிக்கேணி வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் தனது கூட்டாளிகளான வருமானவரித் துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாசிங் ஆகியோா் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், வணிகவரித் துறை அதிகாரிகள் சதீஸ், சுரேஷ் ஆகியோரும் தங்களுடன் இருந்தனா் எனவும் தெரிவித்துள்ளாா்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு, காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ராஜா சிங், சன்னி லாய்டு, வணிகவரித் துறை அதிகாரிகள் சதீஸ், சுரேஷ் ஆகிய ஏழு போ் மீது ஆயிரம் விளக்கு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதில் சதீஸ், சுரேஷ் ஆகியோரை தேடி வரும் போலீஸாா், சன்னி லாய்டு உள்ளிட்ட சிறையில் இருக்கும் ஐந்து பேரை மீண்டும் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனா்.