"கூட்டணி ஆட்சி அமையும் எனச் பேசியிருக்கிறாரே?" - அமித்ஷா பேச்சிற்கு ஆர்.பி.உதயகு...
வாய்ஜாலம் மட்டுமே காட்டும் ஆட்சியாளர்கள்; வாரி சுருட்டிக்கொண்டே இருக்கும் பிளாஸ்டிக் எமன்!
தலையங்கம்
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘‘உலகச் சுற்றுச்சூழல் தினத்தில், நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்குமான நமது முயற்சிகளை ஆழப்படுத்துவோம்’’
- இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
“பிளாஸ்டிக் மாசுபாடு நம்முடைய பூமியை மூச்சுத் திணற வைத்துக்கொண்டு இருக்கிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டை அனைவரும் சேர்ந்து ஒழிப்போம்”
- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடுவதும், இப்படியெல்லாம் ஆட்சியாளர்கள் பேசுவதும் சடங்குபோல ஆகிவிட்டது. ‘பேசிக் கொண்டிருந்தால் மட்டும்போதுமா... செயல்பாட்டில் எதுவும் இல்லையே?’ என்று நாம் ‘குட்டி’க்காட்டுவதும்கூட சம்பிரதாயமாகவே தொடரும் சூழல் நிலவுவதுதான் வேதனை!
மத்திய, மாநில அரசுகள் அதிகாரங்களைக் குவித்து வைத்துக்கொண்டு சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல், சம்பிரதாய விழாக்களை எடுப்பது, ஒரு மண்ணுக்கும் பயன்தரப் போவதில்லை.
2019-ம் ஆண்டு குறிப்பிட்ட மைக்ரான் அளவுக்கும் கீழுள்ள பிளாஸ்டிக் கேரிபேக் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதித்தார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரேவாரத்தில் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்துவிட்டு, இன்னும் வேகமாக இயங்க ஆரம்பித்துவிட்டன, கேரிபேக் தயாரிப்பு நிறுவனங்கள். பின்னே, அள்ளிக்கொடுத்த பணத்தையும் சேர்த்து கிள்ளியாவது எடுக்க வேண்டுமே!
2021-ல் முதல்வராகப் பொறுப்பேற்றதும் தன் பங்குக்கு மஞ்சப்பை திட்டத்தைப் பெருமையோடு அறிமுகப்படுத்தினார் மு.க.ஸ்டாலின். ஆனால், இதற்காக அவர் அறிமுகப்படுத்திய தானியங்கி இயந்திரம், சில மாதங்களிலேயே முடங்கிவிட்டது அல்லது முடக்கப்பட்டுவிட்டது. பிறகு, பிளாஸ்டிக் கேரிபேக் தயாரிப்பவர்களுக்கு யார் பதில் சொல்வது?
மத்திய அரசு கொஞ்சம் தாமதமாக விழித்துக்கொண்டு, 2022, ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக்கை தடை செய்து உத்தரவிட்டது. உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனை என்று எல்லாவற்றுக்கும் தடை என்று வீராவேசமாகச் சொன்னது மத்திய அரசு. ஆனால், இந்தியா முழுவதும் கேரிபேக் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்தபடியேதான் இருக்கின்றன.
இன்னொரு பக்கம், ‘போலி கள்ளச்சாராய ஒழிப்பு ரெய்டு’போல, ‘பிளாஸ்டிக் ஒழிப்பு ரெய்டு’ நடத்தப்படுகிறது. உண்மையாக ‘ரெய்டு’ நடத்தியிருந்தால்தான், கேரிபேக் உள்ளிட்டவை முற்றாக ஒழிந்திருக்குமே!
மனிதர்கள், கால்நடைகள், காட்டுயிர்கள், மண் என ஒட்டுமொத்த பூமியுமே கண்ணுக்கு முன்பாக பிளாஸ்டிக் எமன் வீசும் பாசக்கயிற்றில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன - நாள்தோறும். ஆனால், வெறுமனே வாய்ஜாலம் மட்டுமே காட்டப்படுகிறது, ஆட்சியாளர்களால்!
மக்களே... இவர்களையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். நாளைய நம் சந்ததிகளுக்காகச் சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறை கொண்டே ஆக வேண்டியது, காலத்தின் கட்டாயம். பிளாஸ்டிக் உட்பட சூழல்கேடு விளைவிக்கும் அனைத்தின் பயன்பாடுகளையும் முடிந்தவரை வெகுவாகக் குறைப்போம். முடிந்தால், முற்றாகத் தவிர்ப்போம்.
- ஆசிரியர்