உ.பி: மத்திய இணையமைச்சர் திறந்து வைத்த அம்பேத்கர் சிலை உடைப்பு! மக்கள் போராட்டம்!
உத்தரப் பிரதேசத்தின் சக்கோதார் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சக்கோதார் கிராமத்திலுள்ள, பூங்காவில் புத்தர், அசோகா தூண் மற்றும் அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று (ஜூன் 9) அங்கிருந்த அம்பேத்கர் சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்து சேதமாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிலை உடைக்கப்பட்ட செய்தியை அறிந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஏராளமானோர் பூங்காவின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறை உயர் அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அம்பேத்கரின் புதிய சிலை அங்கு நிறுவப்படும் என உறுதியளித்தனர். இதனால், அங்கு போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், அதற்கு காரணமான குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
முன்னதாக, உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:கூட்ட நெரிசல் பலி: கர்நாடக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!