தில்லி குடியிருப்பில் தீ! 7-வது மாடியில் இருந்து குதித்த தந்தை, 2 குழந்தைகள் பலி!
தில்லி அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தில்லி துவாரகா செக்டார் 13 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பின் 7-வது மாடி முழுவதும் தீ வேகமாகப் பரவிய நிலையில், அப்பகுதியில் சிக்கிய தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் தப்பிக்க கீழே குதித்துள்ளனர்.
அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், ஏற்கெனவே மூவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் குடியிருக்கும் யாஷ் யாதவ் (35 வயது) மற்றும் அவரின் 10 வயது மகன் மற்றும் மகள் என்று தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அதிகளவிலான புகைமூட்டம் எழுந்துள்ளதால், அப்பகுதியில் இருந்து மக்களை காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர்.
குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.