மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
வாரணாசி: நவராத்திரியில் சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து; இறைச்சிக் கடைகளுக்குத் தடை
நவராத்திரி திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம் முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றன. கோயில் நகரமான வாரணாசியில் நவராத்திரி நாட்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் அடைக்கப்படவேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.
மேயர் அசோக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து அசோக்குமார் அளித்த பேட்டியில், "மாநகராட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையாக அமல்படுத்தப்படும்'' என்றார்.
ரம்ஜான் பண்டிகை வருவது குறித்துக் கேட்டதற்கு, "இந்துக்கள் நவராத்திரியை மிகவும் புனிதமாகக் கருதுவார்கள் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே 9 நாட்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும். நாங்கள் என்ன 360 நாள்களுமா நிறுத்தச்சொல்கிறோம். வாரனாசி ஆன்மீக மற்றும் கலாசார தலைநகரம்.
தினமும் 2 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். எனவே பாரம்பரிய நடைமுறை பின்பற்றவேண்டும். எதையும் கட்டாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது''என்றார்.
மாநகராட்சியின் இம்முடிவால் ரம்ஜான் பண்டிகையான ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் முஸ்லிம்கள் இறைச்சி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் இந்நடவடிக்கை முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் முறையாக நவராத்திரிக்கு இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் வாரனாசியில் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் 2 முதல் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் காசி விஷ்வநாதர் ஆலயத்திற்கு அருகிலிருந்த இறைச்சிக் கடைகளுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து
இதற்கிடையே மீரட்டில் போலீஸார் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு முஸ்லிம்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் நமாஸ் செய்யும்போது சில நேரம் சாலை வரை வரிசை நீளும்.
ரம்ஜான் மாதம் என்றால் இது மிகவும் அதிகமாக இருக்கும். இதையடுத்து மக்கள் மசூதிக்குள் நமாஸ் செய்யவேண்டும் என்று மீரட் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மீரட் போலீஸ் கமிஷனர் ஆயுஷ் அளித்த பேட்டியில், ''மக்கள் மசூதிக்குள் நமாஸ் செய்யும்படி கேட்டுக்கொள்ளும்படி மத தலைவர்கள் மற்றும் இமாம்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையில் நமாஸ் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது சாலை மற்றும் தெருவில் நமாஸ் செய்தால் அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படலாம்.

அவ்வாறு பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால் புதிய பாஸ்போர்ட் எடுக்க கோர்டில் தடையில்லா சான்று வாங்க வேண்டியிருக்கும். பதட்டமான பகுதிகள் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
சோசியல் மீடியா தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வதந்தியைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு விதிகளை மீறிய 200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.
பாஸ்போர்ட்டை ரத்து செய்வது என்ற போலீஸார் முடிவுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் செளதரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''போலீஸார் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வோம் என்று சொல்லக்கூடாது. சாலையை ஆக்கிரமிப்பு இல்லாமல் வைத்துக்கொள்வது நிர்வாகத்தின் பொறுப்பு. இது குறித்து சமுதாயத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவேண்டும்'' என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs