பெரிய ஓ வாக போடுவார்கள்: 2026-ல் 2.0 லோடிங் என ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்
வாழப்பாடி அருகே 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு: கொலையா?
சேலம்: வாழப்பாடி அருகே தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகன்களையும் தாயே தண்ணீர்த் தொட்டியில் போட்டுக் கொலை செய்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி விஜயகுமார் (35). இவரது மனைவி இளவரசி (30). இவர்களுக்கு விக்னேஷ் (6), சதீஷ்குமார் (3) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு விஜயகுமாரின் வீட்டுக்கு முன் தோண்டப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டியில், இரு குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த இவரது உறவினர்கள், இரு குழந்தைகளையும் தண்ணீர்த் தொட்டியில் இருந்து சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இரு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன்கள் உயிரிழந்த தகவலறிந்து உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற விஜயகுமார், துக்கியாம்பாளையம் எம்ஜிஆர் நகர் அருகே எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகன்களையும் தாயே தண்ணீர்த் தொட்டியில் போட்டுக் கொலை செய்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் தாயிடம் வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.