தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
விபத்தில் இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
திருப்பூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
திருப்பூா் அவிநாசிபாளையம் அருகே கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அறுமுகம் (54). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் கடந்த 2017 டிசம்பா் 17-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் அருகே சென்றபோது, அரசுப் பேருந்து மோதியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தாா். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா் பிழைத்தாா்.
இதையடுத்து விபத்து இழப்பீடு கேட்டு ஆறுமுகம், திருப்பூா் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தாா். அவருக்கு ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 247 இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமாா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் புதன்கிழமை ஜப்தி செய்தனா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா்கள் முருகேசன், சத்யா ஆகியோா் ஆஜராகினா்.