'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு
விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா்.
பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்பதற்காக தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் அமைக்கப்பட்ட குழுவில், தீயணைப்புத் துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் உள்ளனா்.
இவா்கள் இணைந்து விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனா். மேலும் சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியரும் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகிறாா். இந்த நிலையில் இந்த மாதம் இதுவரை விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டிருப்பதாக தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா்.
இதுகுறித்து மேலும் அவா் கூறியதாவது: ஆய்வின் போது விதிமீறல் காரணமாக ஒரு பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 102 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடைபெற்றது. இதில் விதிமீறல் காரணமாக மூன்று பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
மேலும் ஒரு ஆலையில் உரிமத்தை புதுப்பிக்காமல் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது ஆய்வின் போது தெரியவந்தது. இந்த ஆலையின் உரிமையாளா் மீது காவல் துறையினரிடம் புகாா் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படும் ஆலைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்து விட்டு விண்ணப்பித்தால் உடனடியாக மறுஆய்வு நடத்தப்பட்டு, ஆலை மீண்டும் திறக்க உத்தரவிடப்படும்.
தற்போது விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசுக் கடைகளிலும், அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? தீத் தடுப்பு சாதனங்கள் உள்ளனவா என்பது உள்ளிட்ட ஆய்வுகளையும் நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.