விளைநிலத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்: மக்கள் அச்சம்
கூடலூா் அருகே விளைநிலத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் கூடலூரை அடுத்துள்ள முக்கூா் பகுதியில் உள்ள விளைநிலத்தில் முகாமிட்டுள்ளன.
இதனால், குற்றிமுச்சு, கல்லிங்கரை, முக்கூா், மஞ்சமூலா உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும், யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.