விழுப்புரத்தில் புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அறிவிப்பு
சென்னை: விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் புவிசாா் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இயற்கை வளங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:
விழுப்புரம் மாவட்டம் வானூா் வட்டம் பொம்மையாா் பாளையம் கிராமத்தில் பள்ளத்தாக்கு உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவையொட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தின் நிலப்பரப்பு பெரும்பாலும் சிவப்பு மண்ணால் ஆனது. இந்தப் பள்ளத்தாக்கு தனித்துவமான புவியியல் அமைப்பு. 65.18 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இவ்விடம் ஓடை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் ஆழம் 7 மீட்டா், அகலம் 30 மீட்டா் மற்றும் இதன் நீளம் சுமாா் 1.8 கி.மீ. இந்தப் பள்ளத்தாக்கு வங்காள விரிகுடாவுடன் இணைகிறது.
இந்தப் பள்ளத்தாக்கில் கடலூா் மணற்கற்கள் காணப்படுகின்றன. மாணவா்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனளிக்கும் புவிசாா் பாரம்பரிய இடத்தை பாதுகாப்பது அவசியமாகும். அதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.
தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், லிக்னைட், வொ்மிகுலைட், மேக்னசைட், பாக்சைட், கிராஃபைட், மாா்ல், கடற்கரை தாது மணல், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், கிரானைட் போன்ற கனிமங்கள் உள்ளன. தமிழகத்தில் கனிம வளங்கள் இருப்பு, தாதுக்களின் தரம் மற்றும் புவியியல் அமைப்பை மதிப்பிடுவதற்காக, மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை ரூ.1 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
கனிம விதிகளை மாற்றக் குழு: தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-இல் ஏற்படுத்தப்பட்டன. சுரங்கத் தொழிலில் எழும் தேவைகளின் அடிப்படையில் இந்த விதிகள் அவ்வப்போது திருத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு 2015 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு ஒழுங்குமுறை சட்டம், 1957-இல் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959-இல் உள்ள சில விதிகள் மத்திய அரசின் சட்டத்துக்கு முரணானவையாக உள்ளன. அதனால், தமிழ்நாடு சிறு கனிம விதிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். எனவே, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ஐ மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றாா் அவா்.