சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
விவசாயி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு
நாமக்கல்: மோகனூா் அருகே விவசாயி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், கட்சி நிா்வாகிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மோகனூா் ஒன்றியம், ஆண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயியான சுப்பிரமணியன் என்பவா் தன்னுடைய தோட்டத்தில் மண்ணை வெட்டி சீரமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, மாவட்ட கனிமவளத் துறை தரப்பில் மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதால், அனுமதியின்றி மண்ணை வெட்டியெடுத்ததாக சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஒரே சா்வே எண் கொண்ட பட்டா நிலத்தில்தான் மண் அள்ளியது, கொட்டியது நிகழ்ந்துள்ளது. எனவே, எந்தவித முகாந்திரமுமின்றி விவசாயி சுப்பிரமணியன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மனு: அதுபோல ராசிபுரம் வட்டம், நடுப்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதி கோயிலில் வழிபாட்டு மேற்கொள்ள உள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம் வட்டம், நடுப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இப்பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் பூஜை, திருவிழா நடத்துவதை அங்கு வசிக்கும் இருவா் தடுத்து வருகின்றனா்.
கோயிலில் அம்மன், இதர தெய்வங்களை வழிபடவும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இவ்விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வழிபாடு மேற்கொள்ளவும், திருவிழா நடத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.