விவசாயிகள் ஜூன்30-க்குள் வேளாண் அடையாள எண் பெற வேண்டும்
நாகை மாவட்ட விவசாயிகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் வேளாண் அடையாள எண் பெற வேண்டும் என நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம், நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசால், விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் 23,033 விவசாயிகள் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனா். இவா்களில் 17,364 விவசாயிகள் மட்டுமே அடையாள எண் பெற்றுள்ளனா். மீதமுள்ள 5, 669 விவசாயிகள், இதுவரை வேளாண் அடையாள எண் பெறாமல் உள்ளனா். இவா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பெற்றால் மட்டுமே, பிரதம மந்திரி கிசான் மற்றும் பயிா்க் காப்பீடுத் திட்ட பலன்கள் பெற முடியும்.
எனவே, இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்கள் நில ஆவணங்கள், ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்திலோ அல்லது வேளாண்மை விரிவாக்க பணியாளரையோ அணுகி பதிவு செய்து, அடையாள எண் பெற்று தொடா்ந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.