வெப்ப அலை: திறந்தவெளி தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்கள்!
தலைநகர் தில்லியில் கடுமையான வெப்பம், அதீத மாசு காரணமாக அங்குள்ள மக்கள் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார தினம் இன்று கடைப்பிடிக்கும் அதேவேளையில், தலைநகரில் ஆயிரக்கணக்கான தினக்கூலி செய்யும் திறந்தவெளி தொழிலாளர்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தில்லியில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெய்யில் கொளுத்தி வருகின்றது. ஒருபக்கம் வெய்யில், மறுபக்கம் மாசு இரண்டுக்கும் மத்தியில் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே பல நகரில் இன்றும், நாளையும் அதிக வெய்யிலுக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுத் துறை விடுத்துள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 3.1 டிகிரி அதிகமாக 38.2 டிகிரி செல்சியஸாக பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 18.5 டிகிரி செல்சியஸாகவும், காற்றின் தரக் குறியீடு 209 டிகிரியில் மோசமான பிரிவில் தொடர்ந்தது.
அதிகப்படியான வெப்ப அலையால் சிக்கித் தவிக்கும் தில்லியைச் சேர்ந்த வெளிப்புற தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புகளையும், சுகாதார சவால்களையும் எதிர்கொள்கின்றனர். அதில் தொழிலாளி ஒருவர் கூறுகையில்,
அதிகப்படியான வெப்பத்தால் தோல் எரிகிறது, சிறுநீரக எரிச்சல் போன்ற அவதிகள் ஏற்படுகின்றன. தில்லியில் போதுமான தண்ணீர் கிடைத்தாலும், ஓய்வெடுக்க நிழலான பகுதிகள் பற்றாக்குறையாகவே உள்ளது. உடலில் உள்ள நீர் வெளியேறுவதால் விரைவில் சோர்வு ஏற்படுகிறது. நீண்ட நேரம் வெளியில் வேலை செய்யமுடியாத நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
ஏற்கெனவே காற்று மாசு தலைநகரைப் பாதித்துள்ளது. பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கோடையிலும் நன்கு உணர முடிகிறது. இதில் கடுமையான வெய்யிலால் உடல் ரீதியான பிரச்னைகள் மட்டுமல்லாது, நிதி நெருக்கடியையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வந்து அன்றாடம் பொருள்கள் வாங்குவதும் குறைந்துவிட்டதாக அவர் கூறினார்.