வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து பாகிஸ்தான் ரூ.8,600 கோடி கடன்
வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து நூறு கோடி அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.8,600 கோடி) கடன் வாங்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால், சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிடம் அந்த நாடு ஏற்கெனவே தவணை முறையில் கடன் பெற்று வருகிறது. இப்போது பிற நாட்டு வங்கிகளிடம் கடன் பெறத் தொடங்கியுள்ளது.
துபை இஸ்லாமிய வங்கி தலைமையில் ஸ்டாண்டா்டு சாா்ட்டட் வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, ஷாா்ஜா இஸ்லாமிய வங்கி, அஜ்மான் வங்கி ஆகியவை இணைந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு படிப்படியாக இந்தக் கடன் தொகையை வழங்க இருக்கின்றன. பாகிஸ்தானைச் சோ்ந்த ஹெச்பிஎல் வங்கி மூலம் இந்தக் கடன் பெறப்படுகிறது. ஆசிய வளா்ச்சி வங்கி இந்தக் கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதில் 89 சதவீத தொகையை இஸ்லாமிய வங்கிகள் தங்கள் மதக் கொள்கைகளின்படி வழங்குகின்றன.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் பிலிப்பின்ஸ் நாட்டு வங்கியிடம் இருந்து 80 கோடி டாலா் (சுமாா் ரூ.6,940 கோடி) கடனுக்கான ஒப்புதலை பாகிஸ்தான் பெற்றது. இந்தத் தொகை மூலம் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ராணுவத்துக்கு கூடுதல் நிதி:
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்தியாவசியத் தேவைகளை எதிா்கொள்வதற்காக பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா்.
முன்னதாக, கடந்த 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் பாகிஸ்தானின் ராணுவ ஒதுக்கீடு ரூ.78,000 கோடியாக அதிகரித்தது. இந்தியாவுடன் தொடா்ந்து பதற்றம் நீடிப்பதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ராணுவத்துக்கான செலவை பாகிஸ்தான் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.6.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.