குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
வெவ்வேறு விபத்துகளில் மூவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் இளைஞா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.
மதுரை சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் நவீன்குமாா் (28). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து சேந்தமங்கலத்துக்கு சென்றாா். மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலையில் மதிகுளம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்புக் கம்பியில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எம். சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த ஒச்சாத்தேவா் மகன் ராஜா (55). இவா், உசிலம்பட்டியிலிருந்து உத்தப்பநாயக்கனூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். துரைசாமிபுரம் புதூா் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மதுரை மாவட்டம், மானூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் அல்லிகுண்டம் பகுதியிலிருந்து வீட்டுக்குச் சென்றாா். மானூத்து குடியிருப்புப் பகுதியில் சென்ற போது, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எழுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.