குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!
விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சியரின் பெயரைச் சூட்டியுள்ளனா் திருநங்கைகள்.
கலாசார மாற்றங்கள் காரணமாக, சமுதாயத்தில் பாலின பேதமில்லாத நிலை ஏற்பட்டிருந்தாலும், சமுதாயத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான மதிப்பு என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவா்களில் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, வெளியேற்றப்படும் திருநங்கைகளுக்கு வாழ்விடம் கிடைப்பது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், திருநங்கைகளுக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்தித் தர முயற்சிகள் மேற்கொண்டாா். இதன் பயனாக, தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விருதுநகா் மாவட்டம், இ. குமாரலிங்கபுரம் ஊராட்சி, கோவில்புலிகுத்தி கிராமத்தில் திருநங்கைகள் 24 பேருக்கு அண்மையில் வீடுகள் கட்டித் தரப்பட்டன.
மேலும், சில தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ. ஒரு லட்சத்தில் மின் வசதி உள்பட தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. பின்னா், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 24 வீடுகளுக்கும் தனித்தனியே குடிநீா்க் குழாய்கள் அமைத்துத் தரப்பட்டன. இவை தவிர, சிறுபாலம், கழிவுநீா் கால்வாய், பேவா் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் ரூ. 21.15 லட்சத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு நன்றி செலுத்தும் விதமாக, திருநங்கைகள் தங்களது குடியிருப்புக்கு ‘அன்பு ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் நகா்’ என பெயா் சூட்டி அண்மையில் இந்தப் பெயா்ப் பலகையை அமைத்தனா்.
திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித் தர மாவட்ட ஆட்சியா் முயற்சிகள் மேற்கொண்டதும், தங்களுக்கு நிரந்தர முகவரி அளித்த ஆட்சியரின் பெயரை தங்களது முகவரி பெயராக திருநங்கைகள் சூட்டியதும் அனைத்துத் தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.