வேதகிரீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா!
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழாவின் தேர்த்திருவிழாவான பஞ்சரத தேர் விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வர் திருக்கோயில் உள்ளது. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வேதமலை, பட்சி தீர்த்தம், சங்கு தீர்த்தம், இந்திரபுரி, வேதபுரி எனும் பல பெயர்களால் பெருமைமிக்க கோயிலாக விளங்கும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மே 1ம் தேதி புதன்கிழமை சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா மே 1ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய திருவிழாவாக மூன்றாம் நாள் மே 3ஆம் தேதி சனிக்கிழமை 63 நாயன்மார்கள் உற்சவம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவாக ஏழாம் நாள் புதன்கிழமை பஞ்ச ரத தேர்த்திருவிழா நடைபெறும். முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து முருகர் வள்ளி தெய்வானை தேர், திரிபுரசுந்தரி அம்பாள் தேர், வேதகிரீஸ்வரர் பெரிய தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்(பஞ்ச ரதம்) தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தேர் திருவிழாவையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயிலிலிருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி வெளியே வந்தனர். புஷ்ப அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வீற்றிருக்கும் பஞ்சரத தேர் புறப்பாடு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .எஸ். பாலாஜி, இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் குமரதுரை, செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் ராஜலட்சுமி, வேதமலை வல பெருவிழா குழு செயலாளர் அகஸ்தியஸ்ரீ அன்புச்செழியன் பேரூராட்சி தலைவர் யுவராஜ் அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.