ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஒப்புக்கொண்டதால் அவா்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
கனடாவின் பிரதமராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மாா்க் காா்னி, வாஷிங்டனில் அதிபா் டிரம்ப்பை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் அதிகாரபூா்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் மாா்க் காா்னியுடன் டிரம்ப் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது:
ஹூதி கிளா்ச்சிப் படையினா் இனியும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பவில்லை. அதை அவா்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினா். அவா்களின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்.
அதை ஏற்று, யேமனில் ஹூதி படையினரின் இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் குண்டுவீச்சு நடவடிக்கைகளை உடனடியாக நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்றாா் அவா்.
முன்னதாக, இஸ்ரேலின் சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹூதி படையினா் ஏவுகணை வீசியதற்குப் பதிலடியாக, யேமன் தலைநகா் சனாவிலும், பிற முக்கிய பகுதிகளிலும் இஸ்ரேல் கடந்த 2 நாள்களாக தாக்குதல் நடத்தியது.
இதன் மூலம், சனா நகரிலுள்ள சா்வதேச விமான நிலையம் முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதாக டிரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுவந்தனா்.
இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், அந்த நாட்டுடன் தொடா்பில்லாத கப்பல்களும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறினா்.
இந்தச் சூழலில், ஹூதி படையினரின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக அவா்களின் நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டாா். செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவா்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அவா் கூறினாா்.
அதற்குப் பிறகு யேமனில் அமெரிக்கா நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் சுமாா் 250 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் பெண்கள், குழந்தைகள்உள்ளிட்ட பொதுமக்கள் எனவும் ஹூதிக்கள் அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் அல்-மாசிரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளன. உயிரிழந்தவா்களில் ஆப்பிரிக்காவில் இருந்து யேமன் வழியாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்று, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 68 அகதிகளும் அடங்குவா்.
எனினும், தங்களது தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹூதி படையினா் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து உறுதியான தகவல் இல்லை எனவும் அமெரிக்க முப்படைகளின் தலைமை கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்தது.
இந்தச் சூழலில், தங்கள் தாக்குதல்களை நிறுத்திவைக்க ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஒப்புக் கொண்டதால் அவா்கள் மீதான குண்டுவீச்சு நடவடிக்கைள் உடனடியாக நிறுத்தப்படுவதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளாா்.