மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா நடத்திய பேச்சுவாா்த்தையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், போர் நிறுத்த அறிவிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் மற்றும் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு "நடுநிலை முடிவு" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டது பல கேள்விகளை எழுப்புகிறது.
சிம்லா ஒப்பந்தத்தை நாம் கைவிட்டுவிட்டோமா? மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராஜதந்திர வழிகள் மீண்டும் திறக்கப்படுகிறதா என்று காங்கிரஸ் கேட்க விரும்புகிறது?
ராணுவத் தளபதிகள் இருவரின் கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கருத்துகளுக்கு பிரதமர் இடமிருந்து பதில் தேவைப்படுகிறது.
இறுதியாக, 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் அசாதரணமான, துணிச்சலான, உறுதியான தலைமைக்காக நாடு அவரை நினைவு கூர்வது இயல்பானது என்று காங்கிரஸ் நம்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது