வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்த...
வேலுமணி இல்லத் திருமணவிழா: சீமானை சீண்டிய 2கே கிட்ஸ்; ஏ.சி சண்முகத்தின் தங்கப் பரிசு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மகன் விஜய் விகாஸ் திருமண வரவேற்பு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதால் அதிமுக மாநாடு போல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழிநெடுக பிரமாண்ட கட்அவுட்கள், பேனர்கள், அதிமுக கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.

கட்சித் தொண்டர்கள் மற்றும் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேற்று மதியத்தில் இருந்தே அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கினார்கள்.
சரியாக மாலை 5 மணியளவில் மணமக்கள் மணமேடைக்கு வந்திருந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் கூட்டமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. சத்யராஜ், சிவகுமார், நகைச்சுவை நடிகர் சதீஷ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார், ராதிகா, ரஞ்சித் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வந்தனர்.




ஒவ்வொரு திரைபிரபலங்கள் வந்தபோதும் வேலுமணி தன் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து அறிமுகப்படுத்தி புகைப்படம் எடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி மாலை 6.10 மணிளவில் அரங்கத்துக்கு வந்தார். மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் கீழே உள்ள ஷோஃபாவில் அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் மேடை ஏறி மணமக்களை வாழ்த்தி சாப்பிட சென்றுவிட்டார். அவர் சென்ற சில நிமிடங்களில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், வினோஜ் செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வந்தனர்.


அவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு வேலுமணி நேரடியாக சாப்பிடும் இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு ஏற்கெனவே இருந்த எடப்பாடியுடன் பேச வைத்தார்.
விவிஐபிகளுக்கு தனி டைனிங் ஒதுக்கப்பட்டிருந்தது. தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், காமராஜ், மாஃபா பாண்டியராஜன், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம் ஆனந்தன், அன்பழகன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் வந்திருந்தனர்.



செல்லூர் ராஜூ மணமக்களுக்கு மீனாட்சி அம்மன் சிலையைப் பரிசாகக் கொடுத்தார். செல்லூர் ராஜூ வந்தபோது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளே, “அட நம்ம விஞ்ஞானி.” என்று சிரித்தனர். மேலும் கௌதமி, விந்தியா, கஸ்தூரி ஆகியோரும் வந்திருந்தனர்.
பெரும்பாலான விஐபிகள் பூங்கொத்து, சால்வை, போட்டோ, சாமி படம் ஆகியவற்றைப் பரிசாக வழங்கினார்கள். புதிய நீதிக் கட்சி ஏ.சி சண்முகம் வேலுமணி மகன் விகாஸ்க்கு தங்க பிரேஸ்லட் அணிவித்தார். விஐபிகள் ஒருபுறமும், தொண்டர்கள் ஒருபக்கமும் மேடைக்கு வந்து கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் தொண்டர்கள் பக்கம் கூட்ட நெரிசல் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான பௌன்சர்கள் இருந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


சில பௌன்சர்கள் தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடம் கறாராக நடந்து கொண்டனர். இதைப் பார்த்து கோபமடைந்த வேலுமணி, “பொறுமையாகச் சொல்லுங்கள். அவர்கள் எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்துள்ளனர். கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது.” என்று பௌன்சர்களை கடிந்து கொண்டார்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து அதைத் திரையில் ஒளிபரப்பினார்கள். பாஜக நிர்வாகி விஜயதாரணி, தேமுதிக விஜய பிரபாகரன், சுதீஷ், காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசு, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, எஸ்டிபிஐ நெல்லை முபாரக் ஆகியோரும் வந்திருந்தனர்.

கிட்டத்தட்ட கடைசியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அவர் வந்தபோது அங்கிருந்த சில 2கே கிட்ஸ் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ‘வாட் ப்ரோ..’ என்று சத்தம் போட்டும் சீமானை செல்லமாகச் சீண்டினார்கள்.