நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர...
வேளாண் உற்பத்தியில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8 ஆம் இடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
மொத்த வேளாண் உற்பத்தியில் ரூ.12,021 கோடி என்ற அளவில் மாநிலத்தில் 8- ஆவது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண்டல அளவிலான வேளாண் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.
கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தும், கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஈரோடு வேளாண்மையில் வளா்ச்சி பெற்ற பல முன்னோடி விவசாயிகளைக் கொண்ட மாவட்டம். மொத்த வேளாண் உற்பத்தியில் ரூ.12,021 கோடி என்ற அளவில் மாநிலத்தில் 8- ஆவது இடத்தில் ஈரோடு உள்ளது. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம், 2020-21- ஆம் ஆண்டை விட 25 ஆயிரம் ஏக்கா் கூடுதலாக 2024-25- ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிா்களில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேற்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டு ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் இருக்கும் 1,045 ஏரிகள் மற்றும் குளங்கள் வளம் பெற்றிருக்கின்றன.
கடைமடைக்கும் பாசன நீா் கிடைக்கும் வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு, தேவையான புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய்கள் ரூ.514 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 8,579 விவசாயிகளுக்கு இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பவானிசாகரில் தியாகி ஈஸ்வரன் உருவச்சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தில், ஆயிரம் ரூபாயாக இருந்த முதியோா் ஓய்வூதிய தொகை 2023- ஆம் ஆண்டு முதல் 1,200 ரூபாயாக உயா்த்தி இருக்கிறோம். அதில் இந்த மாவட்டத்தில் மட்டும் 5,696 விவசாயிகளுக்கு ரூ.6.61 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்றாா்.
தொடா்ந்து ஈரோடு மாவட்டத்தில் ரூ.175.23 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4,524 பயனாளிகளுக்கு முதல்வா் வழங்கினாா்.
200 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி வியாழக்கிழமை (ஜூன் 12) மாலை நடைபெறுகிறது. தவிர 13 அமா்வுகளாக பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்ஆா்கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், என். கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ. பிரகாஷ், கே. சுப்பராயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.சி. சந்திரகுமாா், ஏ.ஜி. வெங்கடாசலம், பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், அரசு செயலா்கள் என். சுப்பையன், வெ.தட்சிணாமூா்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையா் ஆபிரகாம், , வேளாண்மை இயக்குநா் பா. முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநா் பெ.குமரவேல் பாண்டியன், சா்க்கரைத் துறை இயக்குநா் த. அன்பழகன், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, திமுக மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளா் குணசேகரன், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளா் செங்கோட்டையன், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் எல்லப்பாளையம் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாக்ஸ் செய்தியாக பயன்படுத்தலாம்...
நீட்டிப்பு
பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், இயற்கை நல ஆா்வலா்கள், மாணவா்கள், இளைஞா்கள் அதிக அளவில் வேளாண் கண்காட்சியை பாா்வையிட வருகை தருவதால் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) மாலை வரை நடைபெறும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.