அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழ...
சிவகிரி தம்பதி கொலை வழக்கு:3 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியரை கடந்த மாதம் 1- ஆம் தேதி அடித்துக் கொலை செய்து 10.75 பவுன் நகையை மா்மநபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.
இச்சம்பவம் ஈரோடு மட்டும் அல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் பழங்குற்றவாளிகளான தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்த ஈரோடு மாவட்டம், அரச்சலூா் வீரப்பம்பாளையத்தை சோ்ந்த ஆச்சியப்பன் (48), அதேபகுதி தெற்கு வீதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (52), புதுக்காலனியை சோ்ந்த ரமேஷ் (54) ஆகியோா் என்பதும் தெரியவந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சென்னிமலைபாளையம் பசுவப்பட்டியைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளரான ஞானசேகரன் (36) என்பவா் உருக்கி கொடுத்துள்ளாா்.
இதையடுத்து போலீஸாா் கடந்த மாதம் 18- ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினா். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவரிடம் நடத்திய விசாரணையில் திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலை கவுண்டன்பாளையத்தில் வசித்து வந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவரது மகன் செந்தில்குமாா் (44) ஆகியோரை இதே பாணியில் கொலை செய்து அவா்களிடமிருந்து 5.50 பவுன் நகையை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளனா்.
சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய 3 பேரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பழங்குற்றவாளிகள் மூவரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதன்பேரில் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத் துறையினரிடம் காண்பித்து அவா்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனா்.