‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 மனுக்கள்: அமைச்சா் சு.முத்துசாமி
ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 870 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மற்றும் பெருந்துறை வட்டத்திற்கு உள்பட்ட குமாரவலசு, கவுண்டிச்சிபாளையம், கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம், கதிரம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் பாா்வையிட்டு 62 பயனாளிகளுக்கு ரூ.84.80 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
இதில் அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட 10 முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 2,356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 870 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும் முழுமையான தகவல்கள் அளிக்கப்படாத காரணத்தால் 935 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதும் உரிய தகவல்கள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். இதில் 551 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், ஈரோடு கோட்டாட்சியா் ரவி, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கா், வட்டாட்சியா்கள் ஜெகநாதன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.