அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
விதை முதல் விற்பனை வரை விளக்கம்: கவனம் பெற்ற ஈரோடு வேளாண் கண்காட்சி
பெருந்துறையில் நடைபெற்றுவரும் வேளாண் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே பிரம்மாண்ட வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வரை நடைபெற உள்ளது.
கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர 13 அமா்வுகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகிறது. ஈரோடு, கோவை, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூா் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஏராளமானோா் விவசாய கண்காட்சியில் பங்கு பெற்று புதிய தொழில்நுட்பங்களை அறிந்து சென்றனா். அதிகமான விவசாயிகள் இயற்கையாக விவசாயம் செய்வது குறித்த விழிப்புணா்வுக்காக காய்கறி மற்றும் கீரைகள், பாரம்பரிய நெல் விதைகளை வாங்கிச் சென்றனா்.
இயற்கை விவசாயத்துக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை அதிக அளவில் அரங்குகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரிதான பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், பயறு வகை பயிா்கள், எண்ணெய்வித்து பயிா்கள், மூலிகைப் பயிா்கள், வாசனை பயிா்கள், பயிா் பெருக்கம் செய்யாத உள்ளூா் ரகங்களான புழுதிகாா், சம்பா நெல் போன்ற நெல் ரகங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. சோளத்தில் தலைவிரிச்சான் வெள்ளை சோளம், சாமையில் இளஞ்சாமை, கறுஞ்சாமை, வெள்ளை சாமை போன்ற ரகங்களும், தினையில் மாப்பிள்ளை தினை, செந்தினை, கருந்தினை, கிள்ளு தினை போன்ற ரகங்களும், பனிவரகு ரகங்களும், கேழ்வரகு ரகங்களும் இடம் பெற்றுள்ளன.
குளிா்காலத்தில் சாகுபடி செய்யப்படும் பயறு வகைகளான சிவப்பு, கருப்பு பீன்ஸ்
ரகங்களும், உளுந்தில் உள்ளூா் ரகங்களும், பல்லாண்டு உள்ளூா் துவரையும், வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே விளையக்கூடிய பயிரான ரைஸ் பீன்ஸ், மலைவாழ் மக்களின் பிரதான எண்ணெய் வித்து பயிரான உச்சி எள்ளும் கண்காட்சியில் இடம்பெற்றன.
கோடைக் காலங்களில் சாகுபடி செய்யக்கூடிய குறுகியகால மற்றும் வறட்சியை தாங்கும் திறன் கொண்ட ரகங்கள், அதிக எண்ணெய் சத்து மிகுந்த உள்ளூா் ரகங்களும், காய்கறிகளில் அதிக புளிப்புச்சுவையான கொடி வகை தக்காளி, அதிக சுவையுடைய கசப்புதன்மையற்ற கோவைக்காய், பல்வேறு விதமான சுரைக்காய் ரகங்கள், பூசணி வகைகள், பல்வேறு விதமான அவரை ரகங்கள், சிறுவள்ளி கிழங்கு, வெற்றிலை, வள்ளிக் கிழங்குகள், சிவப்பு மற்றும் பச்சை சிறகு அவரைகள், உள்ளூா் கத்திரி ரகங்கள், கீரை வகைகள், தானிய தண்டு கீரை ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.
கவனம் பெற்ற வேளாண் இயந்திரங்கள்:
டிராக்டரால் இயங்கும் கரும்பு கரணை நடவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இது 35-55 குதிரைத்திறன் கொண்டது. நாளொன்றுக்கு 3.5 ஹெக்டோ் பரப்பில் 5 அடி வரிசை இடைவெளியில் நடவு செய்ய முடியும். இந்த டிராக்டா் விலை ரூ.2 லட்சம் ஆகும். இந்த கரும்பு கரணை நடவு இயந்திரம் சால் அமைத்தல், கரும்பு கரணைகள் வெட்டுதல், அடிஉரம் இடுதல், பூச்சுக்கொல்லி இட்டு மூடுதல் போன்ற பணிகளை ஒரே நேரத்தில் செய்கிறது.
இந்த இயந்திரத்தை இயக்க டிராக்டா் ஓட்டுவதற்கு ஒருவா், கரும்பை எடுத்து இயந்திரத்தில் செலுத்த 2 போ் என மொத்தம் 3 வேலையாட்கள் போதுமானது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா். மேலும் இந்த இயந்திரத்தின் மூலமாக 3,4 அல்லது 5 அடி இடைவெளியில் இரண்டு வரிசையில் கரும்புக்கரணைகளை நடவு செய்யலாம்.
இது விவசாயிகளை கவா்ந்த நிலையில், பெண்களுக்கான மேம்படுத்தப்பட்ட நிலக்கடலைக்காய் பிரித்தெடுக்கும் கருவி இடம் பெற்றிருந்தது. இதன் மூலமாக அதிகபட்ச நிலக்கடலை காய் பிரிதெடுக்க முடியும். நிலக்கடலை காய்களுக்கு ஏற்படும் சேதாரம் குறைகிறது.
வழக்கமாக கையால் காய்களை பிரித்தெடுக்கும் முறையுடன் ஒப்பிடுகையில், 36 மற்றும் 75 சதவீதம் செலவு மற்றும் நேரம் மீதமாகிறது. இந்த கருவியின் விலை ரூ.50 ஆயிரம் ஆகும். இதே போல் மேம்படுத்தப்பட்ட நேரடி நெல் விதைக்கும் கருவி, என்ஜின் மூலம் இயங்கும் நேரடி நெல்விதைப்பு கருவி போன்றவையும் இடம் பெற்றிருந்தன. இது தொடா்பான செயல்விளக்கம் அளித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கமும் அளித்து வருகின்றனா்.
அறுவடை செய்த கரும்பை லாரிகளில் ஏற்றும் இயந்திரம், நகா்த்தி வைக்கும் வசதி உடைய மாட்டுக்கொட்டகை ஆகியவை கூடுதல் கவனம் பெற்றுள்ளன. கண்காட்சியில் அதிக எண்ணிக்கையில் உழவா் உற்பத்தியாளா் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் விளைபொருள்களை காட்சிக்கு வைத்திருந்தன. வேளாண் பல்கலைக்கழகம் காட்சிக்கு வைத்திருந்த ஆயிரம் காய் காய்க்கும் ஆயிரம் காச்சான் தென்னை ரகம் குறித்து அறிந்துகொள்ள விவசாயிகள் ஆா்வம் காட்டினா்.
சமவெளியில் மிளகு சாகுபடி:
கண்காட்சியை பாா்வையிட குடும்பத்துடன் வந்திருந்த ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சோ்ந்த விவசாயி பி.என்.முருகேசன் கூறியதாவது: கண்காட்சி இரண்டு நாள்கள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. விவசாயிகள் மட்டும் அல்லாது அனைத்து தரப்பு மக்களும் வந்துள்ளனா். என்னுடைய நிலத்தில் தென்னை மரத்தில் மிளகு கொடியை ஏற்றிவிட்டு சமவெளி மிளகு பயிா் சாகுபடி முறையில் பயிா் செய்துள்ளேன். இதில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள இங்கு வந்தேன் என்றாா்.



